தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் எவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதில்லை என, வடகொரியா அறிவித்துள்ளது. இப்போட்டிகளைப் பயன்படுத்தி, கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு எதிர்பார்ப்புக் காணப்பட்ட நிலையில், அது பாதிப்படைந்துள்ளது.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்குபற்றுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்தப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ள நிலையில், வடகொரியப் பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பில்லை எனக்கூற முடியாது என பென்ஸ் தெரிவித்து, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற சமிக்ஞையை வழங்கியிருந்தார்.
ஆனால், இதற்குப் பதிலளிப்பது போல, செய்தியொன்றை நேற்று வெளியிட்ட வடகொரிய அரச ஊடகம், “ஐ.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் கெஞ்சவில்லை. அதேநிலைமை தான் எதிர்காலத்திலும் இருக்கும். தெளிவாகச் சொல்வதானால், தென்கொரியாவுக்கான எமது விஜயத்தின் போது, ஐ.அமெரிக்காவைச் சந்திக்கும் திட்டமேதும் எங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்தது.
இந்தப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில், வடகொரியாவின் சம்பிரதாயபூர்வமான தலைவர் கிம் யொங் நம், வடகொரியத் தலைவரின் தங்கை கிம் யோ ஜொங் ஆகியோரும் கலந்துகொள்ளும் நிலையில், இராஜதந்திரத்துக்கான மிகச் சிறந்த வாய்ப்பாகக் கருதப்பட்டது.
அதிலும் குறிப்பா, கிம் யோ ஜொங், உலக அரங்கில் தனது அறிமுகத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பமாக, இது கருதப்படுகிறது.








